Monday, 26 September 2016

பகுதி 3 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar

இனி புறநானூறு பாடல் ( 201 ) குறிப்பிடும் துவரை எது என்பதை ஆய்வு செய்வோம்.

நீயே வட பால் முனிவன் றவின்டோன்றி
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறப்பேர ண்ணல்

           ( புறநானூறு, கபிலர், பாடல் 201 வரி 8 – 12)



           ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்

          ( புறநானூறு, கபிலர்,பாடல் 201 வரி 15,)


இருங்கோவேளை வடபால் முனிவன் றவின்டோன்றி துவரையை ஆண்ட வேளிருள் 49 - வது வழிவந்த வேளிருள் வேளே என சங்கப்பாடல் கூறுகிறது. இதிலிருந்து இவ்வேளிர் வடபால் முனிவனுடனான தொடர்பு சங்ககாலத்திலேயே குறிக்கப்பட்டது என்பதை காணலாம். இதே குலத்தில் வந்தவர்கள் பின்னர் கொடும்பாளூரைத் தலை நகராகக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆண்டிருக்கிறார்கள். சோழப் பெருமன்னர்களிடம் பெண் கொடுத்தும், கொண்டும் பெரும் புகழ் பெற்றவர்கள். இருக்குவேள் எனப்பெயர்பெற்ற இவர்களது கல்வெட்டுகள் இவர்களை 'யாதவர்கள்' எனக் குறிக்கின்றன. விக்கிரகேசரியாகிய பூதியை கொடும்பாளூர்க் கல்வெட்டு யாதவன் என்று குறிக்கிறது.


கல்வெட்டு இவர்களை யாதவன் என்று குறிப்பிடுவதன் பொருள் என்னவென்றால் இவர்கள் யது குலத்தவர்கள் (சந்திர குலத்தவர்கள்) என்பதாகும்.


'துவரை' என்று குறிப்பிடப்படுவது கண்ணன் வாழ்ந்ததாக சொல்லப்படும் கூச்சரத்திற்கு அருகிலுள்ள கடல் கொண்ட துவாரகை என்று சிலர் கதை சொல்கிறார்கள். சிலர் அது இன்றைய 'காஸ்மீர்' என்கின்றனர். சிலர் கர்நாடகத்தின் 'ஹலபேடு' என்கின்றனர். இன்னும் சிலர் அதை தமிழ் நாட்டின் 'துவரங்குறிச்சி' என்று விளக்குகின்றனர். இவை அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு துவரை பற்றி உண்மை கண்டறியும்பொருட்டு ஆய்ந்த வரலாற்றார் சங்க பாடலில் 'தடவு' என்ற வார்த்தைக்கு கீழ்கண்ட விளக்கத்தை அளித்துள்ளனர்.


நாற்பக்கமும் மலைகள் சூழ்ந்த இடைநிலத்தைத் 'தடவு' என்றோ 'கோட்டம்'  என்றோ குறிப்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களின் வழக்கமாக இருந்தது.

(புறநானூறு 201 - 400 ஒளவை. சு. துரைச்சாமி பிள்ளை திருநெல்வேலி தென்னிந்திய சிந்தாந்த கழகப்பதிப்பு,1951, பக்கம் 4)


"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
 உவரா வீகைத் துவரை யாண்டு"                 (புறம். 201)


என்று கபிலரும் பாடியிருப்பதால், இலங்கையிலும் துவார சமுத்திரம் என்னும் துவரை நகரிலும்  இஞ்சியரண் இருந்தமை அறியப்படும். செப்புக்கோட்டை என்பது இராவணன் கோட்டைப் பெயராக இன்றும் ஈழத்தில் வழங்குகின்றது. செப்புப் புரிசையிருந்த நகர் துவரையெனப் பெயர் பெற்றது கவனிக்கத் தக்கது. துவர் - சிவப்பு துவரை யென்னும் பயற்றின் பெயரும் இக்காரணம் பற்றியதே. துவர் - துவரை

(ஞா. தேவநேயப்பாவானர் )


இவ்வாறு ஞா. தேவநேயப்பாவானர் அவர்கள் துவரை என்ற ஒரு இடம் இலங்கையிலும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்.  ஆதலால் அக்காலத்தில் துவரை என்ற பகுதி பல இடங்களில் இருந்துள்ளன என நாம் முடிவு செய்யலாம். மேலும் துவரை என்ற சொல் வேளாண் வித்து ( ஒருவகை பயற் – தானியம்)  என்றும் கூறுகிறார்.

மேலும், இலங்காபுரி என்பதை மலைகளால் சூழப்பட்ட நகரம் என்றும் சிலர் குறிப்பிடுவர்.


அதுமட்டுமல்ல 'துவரை' என்பதற்கு இரு பாதிகளைக் கொண்ட 'அரையம்' என்பதே விளக்கம். இதை பாடல் 202 தெளிவாக்குகிறது. துவரை பற்றி பேசும்போது 'வடபால் முனிவன் தடவு' என்று வரக்கூடிய பாடல் 201 ஐ மட்டும் வைத்து கதை சொல்வார்கள். ஆனால், அந்த துவரையின் அர்த்தத்தை தெளிவுபடுத்தும் பாடல் 202 ல் உள்ள "இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்" என்ற வார்த்தையை வசதியாக மறைத்து விடுவார்கள்.

(திருசுந்தரலிங்க குடும்பன்)



துவரங்குறிச்சி பற்றி கள ஆய்வு செய்த திரு. இராமமூர்த்தி மகாலிங்கம் கூறுவதாவது:

வடபான் முனிவன் ஒருவர் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டதும் நடுவே பள்ளமான பள்ளத்தாக்கு பகுதியில் தனது வாரிசுகளுடன் வாழ்ந்து வந்தார். வடபான் முனிவன் தமிழ் நாட்டின் தெற்கிலிருந்து சென்று மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்தவர் அல்லது பண்டைய புலம்பெயர் தமிழர்களான சிந்து சமவெளியில் இருந்து கூட வந்திருக்க வாய்ப்புள்ளது. லாடமுனி கூட லாட தேசமாகிய இன்றைய குஜராத் பகுதியில் இருந்து வந்தவர் தான். லாட முனி மற்றும் அகத்தியர் குடும்பர்களின் கோவில்களில் காணப்படுகிறார்கள். 

மலை பிரதேசத்தின் பள்ளமான பகுதிகள் புஞ்சை மற்றும் நன்செய் பயிர் செய்வதற்க்கு கந்த பகுதியாகும். நன்செய் பயிர்களான நெல் மற்றும் வாழையை தமிழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தேவேந்திரக் குடும்பர்கள் என்று சங்கரன் கோவில் கல்வெட்டு கூறுகிறது. ஆதியில் அவர்கள்   துவரை போன்ற புஞ்சை பயற் வகைகளை பயிர் செய்திருக்க கூடும். 

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து புலம்பெயர்ந்து சிவகங்கை வடபகுதி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள துவரையில் ஆட்சி செய்தவர்கள் இருங்கோவேள் வழிவந்த வேளிர்கள் ஆகும்.  அப்பகுதியில் குடும்பர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். பாண்டியரின் மருதை@மதுரை என்ற பெயரை போன்று இருங்கோவேள் வழிவந்த குடும்பர்கள் துவரை என்ற பெயரையும் கொண்டு வந்திருக்க கூடும். அந்த வகையில் உருவானது தான் சிங்கம்புணரி அருகே உள்ள துவரை @ துவார் @ துவாரபுரி பட்டணம்.

நெல் வயல்களுக்கு உரிமையாளராய், மறவர் சமூகத்தவர்கள் இன்று வரை இருங்கோவேள் வழி வந்த குடும்பருக்கு பரிவட்டம் மற்றும் முதல் மரியாதை கொடுப்பதும் தொடர்கிறது. கொண்டையன் கோட்டை மறவர் இறப்பு நிகழ்விலும் இருங்கோவேள் வழிவந்த குடும்பர் தான் புதுத்துணி கொடுக்கிறார்.

(திரு. இராமமூர்த்தி மகாலிங்கம் - துவாரபுரி பட்டணம்)


இங்கு குறிப்பிடப்படும் துவரை என்பது கண்ணபிரான் ஆட்சி செய்த துவாரகை இல்லை என்பது ஏற்கனவே குறிப்பிட்டது போல் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.  ஆதலால் இனி, இவ்வேளிர் யாவர்? இவர் குலம் யாது? இவர் தமிழ்நாட்டின் பழைய மக்களா? ல்லது இடையில் வந்தேறியவரா? அல்லது இங்கு குறிப்பிடப்படும் துவரையில் யார் இருந்தார்கள் என்பதை ஆய்வு செய்வோம்.

தொன்முதிர் வேளிர்” (அகம் - 258; புறம் - 24)

எவ்விதொல்குடி” (புறம் - 202)

 “இருங்கோவேள் மருங்கு” (பட்டினப்பாலை)

என நூல்களில் காணப்படுவதால், வர்கள் பண்டைக்கால முதலே தமிழ்நாட்டில் வாழ்ந்த தொல்குடி என்பதும் தெளியப்படுகின்றது.


வேளிர் பதினெட்டுக் குடியைச் சேர்ந்தவர் என்றும் பதினெண் வகைக் குடியைச் சேர்ந்தவர் என்றும் நச்சினார்க்கினியார் குறிக்கிறார். இவர்களின் அந்த 18 குடிகள் எவை என நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.


அதியமான், மலையமான், திரையன், பாணன் கங்கர் முதலிய குறுநில மன்னர்களும் ஆண்டிருக்கின்றனர். இவர்கள் வேளிர் குலத்தவரா என்று சொல்லத் தகுந்த சான்றுகள் இல்லை. பொதுப்படையாகக் குறுநில மன்னர் என்ற பொருளில் 'வேளிர்' என்னும் சொல் வழங்கப்பட்டது. அவ்வடிப்படையில் இவர்களை வேளிர் எனலாமே தவிர இவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர் எனக் கூற இயலாது. அதியமான் உதியர்களாகிய சேரரின் வழிவந்தவன். திரையன், சோழரின் வழிவந்தவன். பாணர் என்ற சிறந்த குறுநில மன்னர்கள் மஹா பலியின் வழிவந்தோர் எனக் கூறிக் கொண்டனர். இவர்கள் பலருக்கு 'மாவலிவாணராஜன்' என்று பெயர் உண்டு. மகாபலியின் வழியில் வந்தவர் என இவரை மணிமேகலை கூறுகிறது. கங்கர் என்பவர் கங்க வம்சத்தில் பிறந்தோர் எனக் கூறிக் கொண்டனர். ஆதலின் இவர்கள் வேளிர் குலத்தைச் சார்ந்தவர் ஆகார்.

(Dr. இரா. நாகசாமி - யாவரும் கேளிர்)


நச்சினார்க்கினியர், "பல்லொளியர் பணிபொடுங்க" என்ற பட்டினப் பாலையடியின் உரையில், "ஒளியராவார், மற்றை மண்டலத்திற்கு அரசராதற்குரிய வேளாளர்" என எழுதல் ஆராயத்தக்கது.

(இராகவ ஐயங்கார் - வேளிர்  பக். 16)


தமிழ் நாட்டிற்றம் பழைய மதிப்புடன் பல்கிப்பெருத்த யாதவர் உழுதுண்டு வாழ்ந்த வேளாளராவர். ஆசிரியர் - நச்சினார்க்கினியர் தொல்காப்பிய வுரையில் (பொருளதி. 30) அடியில் வருமாறு எழுதுகின்றார்:- "வேளாளர் இருவகையர்; உழுதுண்போரும் உழுவித்துண்போரும் என. இவருள் உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத்தலைவருமாய்ச் சோழ நாட்டுப் பிடவூரும்,அழுந்தூரும்,நாங்கூரும்,நாவூரும்,ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும்,வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி, 'வேள்' எனவும், 'அரசு' எனவும் உரிமை-யெய்தினோரும்,

( இராகவ ஐயங்கார் - வேளிர்)



பாண்டிய நாட்டுக் 'காவிதிப்' பட்டமெய்தினோரும், குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட் கொடைக்குரிய வேளாளராம். உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கோடலும், அவன் மகனாகிய கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலும் கூறுவர்" எனவும், "வேளாளர் பகைவர் மேலும், நாடுகாத்தன் மேலும், சந்து செய்வித்தான் மேலும் அரசரேவற்படி செல்லுதற்குரியர்" எனவும் காண்க. இவற்றால், வேளாளருட் பலரைத் தமிழ்ப் பெருவேந்தர் தம் அரசியலில் உயர்நிலையில் வைத்து மதித்துவந்ததோடு, அவரினத்துச் சிற்றரசரான வேளிருடைய பெண்களை அவ்வேந்தர் விரும்பி மணம்புரிந்து வந்தனரென்பதும் அறியலாம். சேரன் - செங்குட்டுவன் மனைவி 'இளங்கோ -வேண்மாள்' என்று சிலப்பதிகாரங் கூறுதலுங் (காதை - 25- அடி -5) காண்க. பதிற்றுப்பத்தில் இத்தொடர்பு பலவாகக் கூறப்பட்டுள்ளது.

( இராகவ ஐயங்கார் - வேளிர்)



இக்காலத்து அங்கங்கே அகப்படும் சிலா, தாமிர சாஸனங்களிலும் "வேணாட்டரசர், வேள்குலச் சளுக்கி" எனவும் "வராக வெல்கொடி, சூகரக்கொடி" எனவும், சளுக்கியரது நாடு, குலம், கொடி முதலியவை கூறப்படுகின்றன.

(ஸ்ரீ.து.அ. கோபிநாதராயரவர் - சோழ வமிச சரித்திரம், அநுபந்தம் II)



தென்னாடாடண்ட சளுக்கியரைப் பண்டைத் தமிழ் நிகண்டுகள் வேள் புலவரசர் என்று கூறுகின்றன: இதனை " வேள்புல அரசர் சளுக்குவேந்தர்"  எனத் திவாகரத்தும், பிங்கலத்தும் வரும் சூத்திரத்தால் அறியலாம். இவற்றுள், திவாகரத்தில், அச்சளுக்கரது கொடி வராகமென்பதைக் "கேழல்வேள்புல வரசர்கொடியே" என்ற சூத்திரங் கூறுகிறது. இத்திவாகரம் பாடுவித்த அம்பர்கிழான் சேந்தனார், கடைச் சங்கத்தவரான ஔவையாராற் பாடப்பெற்றவர் என்பது, அந்நிகண்டின் தொகுதியிறுதிக்கட்டுரைகளாளே நன்கு விளங்குதலின், அத் திவாகரமும் அச் சங்ககாலத்தது என்பது சொல்லாதே அமையும்.


சசி குலத்தவர்கள் என்றால் இந்திராணியின் வழிவந்தவர்கள் என்று பெயர். ஏனெனில் சசி, கடைச்சியர் என்பது தேவேந்திரரின் மனைவியான இந்திராணி மள்ளத்தியரின் மற்ற  பெயர்கள் ஆகும்.  சாளுக்கியர்கள் சோழர்களின் பெண்வழி வாரிசுதாரர்கள், லால்தான் சாளுக்கியர்கள் தங்களை சசி குல சாளுக்கி என்றும், மல்லர் என்றும் குறிப்பிட்டுக் கொண்டார்கள். இதை கீழ்கண்ட கல்வெட்டு சான்று உறுதி செய்கின்றன.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளகஸ்தியில் உள்ள காளகஸ்தீஸ்வரர் கோயில் சமையலனறச் சுவரில உள்ள கல்வெட்டு ராஜராஜதேவரின் எட்டாவது ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஆகும்.

1.கல்வெட்டு வாசகம்      
"ஸ்வத்ஸ்ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு 8 வது சசிகுல சாளுக்கி தனி நின்று வென்ற வீ'ரநரசிங்கதேவன் ஆன யாதவராயனேன் நாயனார் திருக்காளத்தி உடைய நாயனார்க்கு பெரும் பூண்டிநாட்டுப் பாலைச்சூர் நாற்பாற்கெல்லைக்கும் உட்பட்ட நஞ்சை புன்சை நிலம் கடமையும் பாடிக்காவலும் சாகையும்.,..,,."
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 4, எண் 648)

 2. கல்வெட்டு வாசகம் 
"ஸ்வத்ஸ்ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு 8 வது சசிகுல சாளுக்கி தனி நின்று வென்ற வீ'ரநரசிங்கதேவனான யாதவராயனேன் நாச்சியார் திரக்காளத்தி உடைய நாயனார்க்கு, கருப்பாற்றூர் நாட்டு எக்கோமலப்பூண்டி நால்பால் எல்லைக்கும் உட்பட்ட நஞ்சை புஞ்சை நிலம் கடமையும் பாடிகாவலும் சாரிகையும் .... ..”
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 4, எண் 648 A)


மேலும்,

  1. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி  8 எண்கள் 469 மற்றும்   482  சசிகுல சளுக்கி வீரநரசிங்க தேவன் பற்றியும்
  2. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 380 சசிகுல சாளுக்கி யாதவராஐன் பற்றியும் கூறுகின்றன.


சங்க காலத்திலிருந்தே வேளிர்களில் பலர் வடநாட்டுத் தொடர்பு உள்ளவர்களாகத் தங்களைக் கூறிக் கொண்டனர். அதற்காக அவர்கள் வடநாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற பொருளல்ல. ஏனெனில், குமரி கண்டம் கடல்கோலால் பாதிக்கப்பட்டதால் அக்குள்ள மக்கள் புலம் பெயர்ந்து பல இடங்களில் குடியேரினர். அவர்கள் இந்தியா மட்டும் அல்ல உலக நாடுகள் பல இடங்களில் குடியேரினர். இக் கருத்தை கடலியல் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு அவர்கள் தன் ஆய்வின்மூலம் நிருபித்துள்ளார். Dr. அம்பேத்ர் அவர்கள் ஒரு காலத்தில் தமிழர்கள் இந்தியா முழுவதும் இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். மா.சொ. விக்டர் அவர்கள் உலக முழுவதும் மள்ளர்கள் ஆட்சி செய்ததை தமிழர் நில மேளான்மை என்ற நூலில் விளக்கியுள்ளார்.


இக்கருத்துக்களை உறுதி படுத்தும் விதமாக இந்தியாவில் பல மாநிலங்களில் வாழும் சத்திரிய குர்மி (சத்திரிய குடும்பி, கும்பி, குடும்பர், பட்டேல், வர்மன்) மக்கள் நாங்கள் தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்றும், எங்கள் முன்னோர் தமிழகத்தில் இன்று வாழும் 'குடும்பர்கள்' என்றும் குறிப்பிடுகின்றனர்.



பழனி முருகன் கோவில் செப்பேட்டில் ( வரி 191 - 195) தெய்வேந்திர பள்ளர் விருது பற்றி குறிப்பிடும்பொழுது


இப்படி பள்ளனெனப்பட்ட சாதி காசிக்கும் தெற்கு, கண்ணியாமுரிக்கும் வடக்கு, மாந்தைக்கும்  கிழக்கு, மானொளிக்கும் மேற்கு, இந்த நான்கு தேஷத்திற்க்குண்டாகிய பள்ளனெனப்பட்ட சாதி அனைவோர்களுக்கும் தரும்ம விளக்கம் செய்கின்ற பழனி மட சிவாலயம் தெய்வேந்திர பள்ளன் விருது என்று கூறுகிறது.


ஆதிநித்த குடும்பன் ஆட்சி செய்த, அதாவது, உலகின் முதல் மாந்தன் தோன்றியதாக சொல்லப்படும் ஆதிச்ச நல்லூரில் இன்றும் ஆதிநித்த குடும்பனின் சந்ததிகள் மஹாபாரத போர் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் வேறு எங்கும் இது போன்ற விழா எடுக்காதபோது, ஆதிநித்த குடும்பனின் சந்ததிகள் மட்டும் ஏன் இது போன்ற விழா எடுக்க வேண்டும் என்பதை சற்று சிந்திக்கவேண்டும்.


மேலும், ஒரு வரலாற்றுச் சான்றாக தேவேந்திர சமுகத்தின் ஆதின குருக்கள் நியமனம் பற்றி குறிப்பிடும் நத்தம் செப்பு பட்டையத்தில் பல நாட்டு குடும்பர்கள் பற்றி குறிப்பிடுகையில் துவாரபுரி நாட்டுக் குடும்பர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. ஆதலால் புறநானூறு (201) குறிப்பிடும் துவரையில் குடும்பர்கள் இருந்தார்கள் என்பது உறுதியாகிறது.



                                                                         
                                                                                                           (தொடரும்)             
                                    

No comments:

Post a Comment